07/03/2024
இன்று உலக மகளிர் தினமாம். அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறோம். நல்லது. எந்த மகளீர்களைப் பற்றி. பொள்ளாச்சியில் பெண்களை பலாத்காரம் செய்தார்களே அந்த பிள்ளைகளை பெற்று வளர்த்தார்களே அந்த அம்மாக்களையா, புது தில்லியில் பேருந்தில் ஒரு பெண்ணை சாகடித்த ஆண்பிள்ளைகளை பெற்ற தாய்மார்களையா, இப்போது பாண்டிச்சேரியில ஒரு 8 வயது குழந்தையை நாசம் பண்ணார்களே அந்த பரதேசிகளை பெற்ற ஆம்மாக்களையா, யாரை போற்றுவது. ஆவதும் பெண்ணாலே மனிதன் அழிவதும் பெண்ணாலே என்பது எவ்வளவு சரி. என் பையன் ஆம்பள அவன் அப்படித்தான் இருப்பான் என்று பெருமையுடன் மார்தட்டிக்கொள்ளும் தாய்மார்கள் இன்னும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் இந்த உலகில். தன் சுகம் துறக்கத் துணியாத எந்த ஒரு பெண்ணும் ஒரு சிறந்த தாயாக முடியாது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியி்ல் ஒரு தாய் கூறினார்கள், ஆண்கள்தான் நிறைய தவறுகள் செய்கிறார்கள். கொலைகள் கூட செய்கிறார்கள் என்றார். இன்னொரு மாதரசி சொன்னார்கள், வீட்டில் எல்லா வேலையையும் எம் பொண்ணே செய்யறா, ஏன் ஆண்கள் செய்யகூடாதா? கண்டிப்பாக செய்யலாம் ஆனால் அப்படி அந்த பிள்ளைகளை பழக்காதது யார் தவறு, அந்த அம்மாதானே.
ஒரு குழந்தையின் வளர்ப்பு தாயின் கருவறையில் இருந்து தொடங்குகிறது. நாம் தவறு செய்கிறோம் தாய்மார்களே. தயவுசெய்து அதை உணருங்கள். ஆண் பெண் எந்த குழந்தையாக இருந்தாலும் நம் வளர்ப்பில் நாம் செய்யும் தவறுகளே அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. 25 வயது பெண் குழந்தைக்கு அலுவலகம் சென்று மதிய உணவு கொடுத்து விட்டு வரும் தாயும், தன் மகனை, சாப்பிட்ட தட்டைகூட கழுவாமல் அப்படியே போட்டுவிட்டு செல்ல அனுமதிக்கும் தாய்மார்களும் இருக்கும் வரை பிள்ளைகள் எதிர்காலம் கேள்விக்குறிதான். தன் மகள் நன்கு படித்து தங்க பதக்கம் வாங்கவேண்டும் என்று பாடுபடும் தாய்மார்கள், அவள் இந்த உலகில் தனியாக தன் தேவைகளை தானே கவனித்துக்கொண்டு சுதந்திரமாக வாழ பழக்குவதில்லை. பெண்கள் சுதந்திரம் என்பதை தவறாகவே புரிந்து கொண்டுள்ளார்கள் என்பது என் எண்ணம். கண்டிப்பாக ஆணும் பெண்ணும் சமம் என்பது தவறு. அந்த ஆணைப் பெற்று அவனை நற்பண்புகளோடு வளர்ப்பது ஒரு பெண்ணால் மட்டுமே முடியும் என்பதால், பெண் பல மடங்கு உயர்வானவள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இது பெருமையில்லை, இது கடமை. நம் கலாச்சர கேடு என்பது நம் வீட்டில் இருந்துதான் தொடங்குகிறது. கலாச்சாரம் என்பதன் பொருள் உலகம் முழுவதும் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், என்னை பொருத்தவரை அது ஒரு ஒழுக்கம், பண்பு. அடுத்தவர் துன்பத்துக்கு நாம் காரணமாகாமல் நம்மை காத்துக்கொள்ளும் ஒரு உயரிய பண்பு. அந்த பண்புகள் தான் தனி மனித ஒழுக்கம். அந்த ஒழுக்கம் மட்டுமே உலக மாந்தர்களின் கலாச்சாரம். இதை ஒவ்வொரு தாய்மார்களும் தன் மக்களுக்கு சொல்லிகொடுத்து வளர்க்க வேண்டும்.
கீதா